Thursday 8 October 2015

மறுத்துக்கொண்டே சரி என்கிறேன் ...

அலையின் ஓய்வற்ற
இரைச்சலின் மேல்
வெறுமை கொண்டலையும்
ஓர் வண்ணத்துப்பூச்சியாகவே அலைந்து கொண்டிருக்கிறேன்...

கொட்டும் பெருமழையாய் வீழ்பவனை கைகளில் ஏந்திக்கொள்ளும் பிரயத்தனங்களில் கண்களில் பொருத்திய கண்மை கரைப்பதே இலட்சியம் உனக்கு...

கதகதப்பிற்காய் ஏங்கும் பூனைக்குட்டியை ஒத்தவளாய்
உன் கைவிரல்களுக்காய் காத்துக்கொண்டிருக்கிறேன் தேர்ந்தெடுக்கப்பட்ட உனதான
சில வார்த்தைகளோடு ...

நமக்கென பெய்யும் மழையில் நீயின்றி நனைந்தும்
உன் பிடிவாத விலக்கல்களில்
துளி கண்ணீரிட்டு அதில் அழுத்தமாய் தீவிரமாகவே உன்னை எழுதிக் கொள்கிறேன்...

அர்த்தமற்று எழுதியும் பேசியும் திரிந்து கொண்டிருந்தவள்
கனத்த மௌனங்களில் தவிப்புடன் சில சொற்களை பத்திரப்படுத்த கற்றுக்கொண்டது எப்போது...

உடையக்கூடாதென்ற கவனங்களில் உடைத்தும் விடுகிறாய்
அதீத ஸ்நேகத்தில் அதீத வெறுமையிலும் ஊசலாடிக்கொண்டே மறுத்துக்கொண்டே சரி என்கிறேன்...

No comments:

Post a Comment