Sunday 11 October 2015

சிறகுகளை நம்பி ...

காலை குளிருக்கு பயந்து வீட்டின் வாசல் திறக்காமல் வேலைகள் அனைத்தும் முடிந்தது.இனி சற்று நடப்பதா இல்லை இன்னும் சிறிது வெளிச்சம் வரும்வரை முகநூலுக்கு போகலாமா என்ற யோசனையில் அலைபேசியை கையில் எடுத்து அமர்கிறேன்.

        ஜன்னல் கம்பில் வந்து அமரும் சிட்டுக்குருவி கவனம் ஈர்க்கிறது .அதனிடம் ஏன் குளிர், மழை பற்றிய முணுமுணுப்பு இல்லை என யோசிக்கிறேன்.

         பறவைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதன் பறத்தல் மட்டும் இல்லை போலும் .அதன் இடைவிடாத பயணம், தடை தாண்டிப் போகும் அதன் முயற்சி , இயல்பு மாறாத அதன் களிப்பு யாவும்தான்!

   பறவை கிளைகளை
     நம்பி அமர்வதில்லை....
   தன் சிறகுகளை நம்பி .....

குடை பிடித்தாலும் பாதம் தொடும் ...

மழை
வானத்தின்
கொடைதான்......

ஒரு போதும்
மறுக்க இயலாது
மழையை .....

குடை பிடித்தாலும்
பாதம் தொடும் !.....

சொற்கள்...

மனிதர்களின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள். அது தானியத்தை போன்றது.விளைநிலத்தில் விதைக்கப்படும்போது வளர்ந்து செழிப்பதோடு விதையாகவும் மாறுகிறது .விதையாக்குவதும் வீணாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது ...

கவிதைக்காரா ...

இவ்வளவு குழப்பம் ஏன்
கவிதைக்காரா ?.....

எனக்கென தினம் எழுதும்
கவிதைகளை விடவா
எனக்கோர் பெயர் சூட்டுவதில்
சிரமம் உனக்கு?....

ரயில் பயணங்களில் ...

ரயில் நிலையத்தின் வாசல்
கனவின் நுழைவாயிலாகவே
தெரிந்தது எனக்கு....

அது என்னை எங்கேனும்
அழைத்து செல்கிறதா
இல்லை திரும்பவும்
அழைத்து வருகிறதா ...

ரயில் நகரும் போது
மனமும் சேர்ந்தே நழுவிச்செல்கிறது...

ரயிலும் வசீகரமாகவே
தொடர்கிறது தன்
பயணங்களை.....

Friday 9 October 2015

என் மீதான நேசத்தின் ...

என் மீதான
உன் நேசத்தின்
கேள்விகள்
உன்னிடத்திலும் ......

அதற்கான பதில்கள் என்னிடத்திலும்
பத்திரமாய்
இருக்கட்டுமே!.....

உன்னிடம் பேசப்போவதில்லை.

உன்னிடம்
    பேசப்போவதில்லை.....

என்பதில் இருந்தே.
    துவங்குகிறது
         நம் உரையாடல்கள்....

சொட்டும் ப்ரியங்கள்

வீடெங்கும்
உதிர்ந்து கிடக்கும்
காரைகள் போலவே ...

என் இயலாமைகளில்
உதிர்ந்து போகையிலெல்லாம்
தோள்களில் தாங்குகிறாய் ....

உன் வார்த்தைகள்
ஒவ்வொன்றிலும்
சொட்டிக்கொண்டே
இருக்கிறது ...

என் மொத்த உலகின்
வாழ்தலுக்கான
உயிர்த்துளிகள் ...

!!!

மொழியற்ற மௌனங்களை
தந்துவிடுகிறாய்
இல்லை
நீளும் உரையாடல்களில்
மூழ்கடிக்கிறாய்
இயல்பாய் மட்டும்
இருக்கவே முடிவதில்லை
உன்னிடம் ...!!!

!!!

என் இருப்பை உனக்கு
உணர்த்திக் கொண்டிருந்த
அந்த ஒற்றை சொல்லை
தவறவிட்ட கணத்தில்தான்
தொலைந்திருக்கக்கூடும்
என் சிறகுகளும்
சில வர்ணங்களும் ...!!!

!!!

கோபங்களை
போல அல்லாது
அத்தனை எளிதாய்
வெளிப்படுத்த
முடிவதில்லை
ப்ரியங்களை ....

!!!

முதல்முறையாய்
           தோன்றுகிறது ...!!!

அனிச்சையாய்
குதூகலிக்கச் செய்யும்
இம்மழை வாராதிருந்தால்
சற்று தேவலாம் ...!!!

!!!

என்ன சமாதானம் சொல்லி
               அழைத்து வர????

பிடிவாத மழலையாய்
உன் கடைசி வார்த்தைகளில்
தேங்கி நின்று விட்ட
மனதினை ...!!!

அதீத குளிர்ச்சியும் ...

அதீத குளிர்ச்சியும்
சுடும் என்பது
உயிர் வரை
உறைக்காமலே
போயிருக்கும் ....

நீ அளித்த
சில முத்தங்களும்
பயந்து பயந்து
நான் கொடுத்த
ஓர் முத்தமும்
உணரும் தருணம்
கொஞ்சம் காலத்தின்
பக்கங்களில்
நழுவி விட்டிருந்தால்....!!!

கல் வனமாய் ....

பிரிவினை அறிவித்துக்கொண்டே
இருக்கிறாய்...
பறவையின் சிறகென
உதிரச்செய்யவே
பெருமுயற்சி கொள்கிறாய் ...

ஊடுறுவும் குளிர் பனியில்
இறுகப் பற்றும் போர்வை போல
உருகிக் கசியும் துயர்தனை
அழுந்தப்பற்றிக் கொல்கிறது நினைவு...

உன்னிலான என் ப்ரியங்களின்
மீதான வனமெங்கும்
அழுந்த எழுப்புகிறாய்
பிரிவுகளின் நெடிதுயர்ந்த மதில்களை...

எதைக்கொண்டும் உடைக்க
எத்தனிக்காது வலிநுகர்ந்தபடியே
உன் அரணுக்குள் உறைகிறேன்
ஓர் கல்வனமாய் ...!!!

பொதுவில் பெய்யும் இம்மழை ...

நீயும் நானும்
கனத்திருந்த
பொழுதொன்றில்
சில சொற்களும்
மௌனங்களுமாய்
தர்க்கமற்று
உறைந்திருந்தோம்...

நனைக்கவோ
துடைக்கவோ
பொதுவில் பெய்கிறது
இப்பெருமழை ...!!!

ரக்‌ஷா பந்தன் ....

அண்ணணின் பத்தாத சட்டைகளை நாகரீக உடையென போட்டுத் திரிந்திருந்த தினங்களும் ...

அவன் ஹீரோவாய் வலம் வந்த ஹெர்குலிஸ் என்னுடையதாய் மாறியிருந்த தினமும் ...

என் சிரிப்புகளுக்காய் தாயக்கரங்களில் பகடைகளை தெரிந்தே பலி கொடுத்திருந்த தினங்களும் ...

மாமன் மகள்களுக்கிடையில் ஒற்றையனாய் சிக்கிக்கொண்டு குறுவெட்கத்தோடு மாட்டியிருந்தவனை ரசித்திருந்த தினங்களும் ...

தகப்பனாய் நின்று கரம் பிடித்து கொடுத்தவன் தோள்சாய்ந்து நான் மட்டுமே அழுது கிளம்பிய தினமும் ...

கண்விழித்து காண்கையில் கையில் மகளை ஏந்தியவண்ணம் அழுது சிவந்திருந்தவனை உருகியவண்ணம் கண்ட தினமும் ...

என இவ்வாறான தினங்கள் இவ்வளவு எளிதாய் வருடம் ஒருமுறை நினைவூட்டும் இந்நாளைப்போல வாய்த்துவிடுவதில்லை ...

feeling loved ...

ஒரு கொட்டுக்காரனின்
முதல் அடியிலிருந்தோ
நாயனக்காரனின்
உதட்டுச் சுழியிலிருந்தோ
துவங்கிடும் திருவிழாக்கள் போலவே

உன் பெயரை யாரேனும்
உச்சரிக்கக் கேட்கையில்
துவங்கிவிடுகிறது ...
feeling loved ம்ம் ...

துளித்துளியாய் ...

கோடிட்ட இடங்களை
நீயே நிரப்பிக்கொள்
என்கிறேன் ....

துளித்துளியாய்
எனை நிரப்பத்
துவங்குகிறாய் ...!!!

ஈரம் உறிஞ்சும்
காகிதமாய் உனை
உறிஞ்சத் துவங்குகிறேன் ...!!!

!!!

உன்னைப் போலதான்
ஏனோ தானோ
என தூறிக்கொண்டிருக்கிறது
இந்த மழையும் ...!!!

!!!

அப்பிக்கொள்வாய்
என்ற அச்சத்தினூடே
உனை கடக்கையில்
சொட்டிவிடுகிறது
சில எச்சங்களின்
வர்ணங்கள் ...

!!!

ப்ரியங்கள் ஒளித்து
வைக்கும்
பெருமுயற்சியனைத்தும்
மண்ணில் ஊன்றிய
விதையெனவே
வேர் விடுகிறது ...!!!

ப்ரியங்களின் வாசனை ...

உனை நினைவூட்டும்
ஜன்னலோரப் பயணங்களை
தவிர்க்க நினைத்தாலும்
வாய்த்தும் கனத்தும்
விடுகின்றன சமயங்களில் ...

தூரத்து மலையும்
தாழ மிதக்கும் மேகமும்
திறந்தே வைக்கிறது
பிரியங்களின் வாசனைகளை ...

சதா ஏதோ ஓர் பாடலை
முணுமுணுக்கும் மழையும்
இன்று ஏனோ நமக்கான
பாடலையே இசைக்கிறது ...!!!

ஒற்றை வளைவில்...

அந்த ஒற்றை வளைவில்
உன்னை நிறுத்திவிட்டேதான்
திரும்பிப் பாராமல்
நடக்கிறேன் ....

உடைக்காமல்
பார்த்துக்கொள்ளச் சொல்லி
கேட்டுப் பின்துரத்தும்
வார்த்தைகளை என்ன செய்ய ??...

லவ் யூ யவனி ...

சின்னச் சின்னதாய்
முத்தப்பூக்களிலும்...
தேர்ந்தெடுத்த சொற்களோடு
ஒரு பிறைச்சிரிப்பிலும் ...
வெறுமனே வானமெங்கும் நிறம்
மாற்றத் துவங்குகிறாள் ...
இன்னும் கொஞ்சம்
கோபம் விடாது காத்திருந்திருக்கலாம் ...

#லவ் யூ யவனி #

செல்ல கோபங்கள் ...

மோவாய் பற்றி
முகம் திருப்பும்
சமாதானங்களில்

திரும்பிக் கொள்கிறது
காத்திருத்தலுக்குப் பிறகான
செல்லக் கோபங்கள் ...!!!

உயிர் பற்றிக்கொள்கிறேன் ...

கடவுள் தரிசனத்திற்காய்
உயர்த்திக் காட்டுகையில்
இறுகத் தோள்பற்றும்
குழந்தையெனவே
சமயங்களில் உன்
உயிர் பற்றிக்கொள்கிறேன் ...!!!

ஸ்நேகம் ...

கேட்கப்படாத
மெல்லிசைக்குள்
உறைந்திருக்கும்
நிசப்தங்கள் போலவே

பேசிட ஏதுமற்ற
தருணங்களிலும்
பூத்துக்கொண்டிருக்கின்றன
ஸ்நேகங்கள் ...!!!

தேவதை ...

தேவதை
என்றுரைத்துவிட்டாய்
வேறு வழியில்லை
சிறகுகளும் தந்துவிடு ...!!!

திகட்டிவிட்டாய் ...

திகட்டிவிட்டாய்
என சீண்டிய
கணங்களைப் போல
அவ்வளவு எளிதாய்
உணர்த்தமுடிவதில்லை
தீர்ந்து விட்டிருந்த
கணங்களை ...

Thursday 8 October 2015

தோழமை...

மழை இரவுக்குப் பின்னான
விடியல் போலவே
அழகாகத்தான் இருக்கிறது

நினைத்ததெல்லாம்
பேசிவிடும் தோழமையொன்று
வாய்க்கப் பெறுகையில்

இன்றைப் போலவோ
நாளை இன்னும் அழகாகவோ
இருக்கக் கூடும் ...!!!

லவ் யூ யவனி...

நனைந்து விடக் கூடுமென
அப்பாவின் தலையில்
துப்பட்டாவால் முக்காடிட்டு
ஏந்திய மழைநீரை விசிறியவளை
பிடிக்க எத்தனிக்கையில்
நெட்டித் தள்ளிவிட்டு
மழையினூடே ஓடியவாறு
பழிப்பு காட்டுகிறாள்
யவனி குட்டி...
நனையத் துவங்குகிறது
மழை ...

பச்சையங்கள் கூடித்திரியும் மனது

மனக்குருதி பருகக்
காத்திருந்த யட்சங்கள்
ஏமாற்றமடைந்தே
சபிக்கின்றன ...

ரணங்கள் கீறக் காத்திருந்த
ஆயுதங்களெங்கும்
துருவென படர்ந்திருந்தன
தோல்வியின் சாயங்கள்...

மண்டியிட வேண்டிய
அவசியமின்றி ஆழ்கடல்
மௌனமென இதயத்தின்
நான்கு அறைகளும் ...

இலைகள் உதிர்தலை
ஏற்றுக்கொள்ளும்
மரமென பச்சையங்கள்
கூடியே திரிகிறது மனது ...

தணிப்பதற்காய் வந்த மழை
தணித்தே செல்கிறது ...
திரியும் இந்நிலவும்
தூவியே செல்கிறது சௌந்தர்யங்களை ....!!!

நீங்கள் நீங்களாகவே ...

புன்னகைக்க
விரும்பிய
கணங்களில்
ஆராயத்துவங்குகிறீர்கள் ...

நேசத்தின் பொருட்டு
நானற்ற ஒன்றில்
நானாய் மாற
முயற்சிக்கிறீர்கள் ...

நீங்கள்
நீங்களாகவே
இருந்து
விடுங்களேன்...!!!

மிஸ் யூ...

நிரப்பாமல்
விடப்படும்
ப்ரியங்களை
நிரப்பிவிடுகிறான்
மிஸ் யூ க்களில் ...!!!

மழை மாலை பொழுதுகளுக்காய் ...

இன்னும் கொஞ்சதூரம்
நீண்டிருக்கலாம் அம்மலைப்பாதை ...

இன்னும் சிலபாடல்களை
உயிர்பித்திருக்கலாம் ...

இன்னும் ஸ்வாரஸ்யங்களை
கொண்டாடி இருக்கலாம் ...

இன்னும் பகிரப்படாமல்
மீதமிருக்கும் ப்ரியங்கள்
காத்திருக்கிறது மற்றுமோர்
மழை மாலை பொழுதுகளுக்காய்....

வழியும் ப்ரியங்கள் ...

பொத்திப் பொத்தி
வைத்துக்கொள்வேன்
உன்மீதான அன்பை
என்னால் நீ என்னுள்
விழுந்துவிடக்
கூடாதென்று ...

இருந்தும் என்னிலிருந்து
எப்போதாவது பெருகி
வழிந்து விடுகிறது...
உன்னுடைய  ம்ம் க்களிலும்... அப்படியாக்களிலும்...!!!

வழியும் ப்ரியம்
கொண்டே நிரப்பிவிட
முயல்கிறேன்
தூர இடைவெளியை....

ப்ரியங்கள்  வழிந்துகொண்டே நிரம்பிவிடுகிறது
நமக்கான இடைவெளிகள்....!!!

காற்றுக்குமிழி ...

எந்த நேரமும்
உடைபட காத்திருக்கும்
காற்றுக்குமிழியாய்
வெளியெங்கும்
சுற்றி அலைகிறேன் ....

உயிர்த்துளி ஒன்றினை
சொட்டிவிட்டுப் போ
உடைபட ....!!!

தீ விழுந்த வனமாய் ...

மிச்சம் இருக்கப்
போவதில்லை எதுவும்...
தீ விழுங்கித் தொலைந்து
கொண்டிருக்கும் வனமாய்
காணாமல் போய்க்கொண்டே
இருக்கிறது நமக்கான
உள் அரட்டைபெட்டி அரட்டைகள் ....

ஒருவேளை மிஞ்சியிருக்கலாம்
உரைகளில் அனுப்பாமல்
ஒளித்து வைத்துக்கொண்ட
சில தவிப்புகளும்...
வெட்கமற்று அனுப்பிய
முத்த ஸ்மைலிகளிக்கிடையே
வெட்கப்பட்டு அனுப்பிய
சில ம்ம்ம் களும்...!!!

ரசித்துக் கொண்டிருக்கிறேன் ...

தோற்றவளாய் ரசித்துக்
கொண்டிருக்கிறேன் ....

என்னில் தொலைந்துவிடக் கூடாதென
நீ எடுக்கும் பிரயத்தனங்களில்
தோற்கும் தருணங்களை ...

எனக்கான ப்ரியங்கள் ...

ஒப்பனைகளோடு
உன்னிலிருந்து
வெளிப்படும் வார்த்தைகள்
ஒவ்வொன்றின்
கூர்முனைகளிலும்
சொட்டிக்கொண்டிருக்கிறது
வலிகளில் தோய்ந்த
எனக்கான ப்ரியங்கள் ....

பட்டுப்போதலே துயரற்றது ...

பொழிந்து விட
ஆயத்தமாய் கருமேகங்களாய்
சூழ்ந்து நிற்கிறாய் ...

நனைக்காமலே சென்றுவிடு
பட்டுப்போதலே துயரற்று இருக்கும் ...

தொலைந்தே போகிறேன் ...

பேச்சில் நிரப்பிக் கொண்டே இருக்கிறாய்...
நினைவில் இழை இழையாய்
நெய்தபடி இருக்கிறாய்...
உள்ளே ஊடுருவி அறுத்துக்கொண்டே இருக்கிறாய் ...
தொலைந்தே போகிறேன்
விட்டு விடேன்...

பள்ளிக்கூடம் ...

கடக்கும் ஐந்து விநாடிகளில்
நம் பால்யத்தை
மீட்டெடுத்து விடுகிறது
நம் பள்ளிக்கூடம் ....

நாம் வழக்கமாய் அமர்ந்துண்ட சரக்கொன்றை மரமும் ...

நம் சண்டைகளையும் சமாதானங்களையும் இன்றுவரை வெளிச்சொல்லா மாதா சிலையும் ...

உனக்காய் நான் தினம் காத்திருக்கும் இடத்திலிருந்து உன் வீடு நோக்கிப் பிரியும் சாலையும் ...

என ஏதும் மாறாமல் இருக்க
இங்கு உனக்கான ஓர்
வாழ்த்துச் செய்தியோடு
பால்யத்தை கடந்து விட்டிருக்கிறேன் நான் ...

லவ் யூ யவனி...

மழைக்கு முன் உணரும்
ஓர் அடர் வெக்கையெனவும்
சிவந்து போன அந்திவானமாய்
அயர்ந்து போய் அரூபமாய்
சுழற்றியடிக்கும்
எண்ணங்களுக்கிடையில் ...

அவள் பின்னங்கழுத்தின் கீழான
பூனைமுடிப் பிரதேசங்களில்
முகம் புதைத்துக் கொள்கிறேன் ...

திரும்பாமல் அனிச்சையாய்
கை பற்றி கோர்த்துக்கொள்ளும்
நொடிகளில் மனத்துரு உதிர்த்து
கதை பேசத் துவங்குகிறேன்
தேவதையின் சிறகேறி...

#லவ் யூ யவனி ...

!!!

என்னை விட்டுவிடு
என்கிறாய்
வெற்றிடங்களையும்
நிரப்பிக்கொண்டே ...!!!

வட்ட வட்ட சலனங்களில் ...

தவிர்க்க நினைக்கும் நினைவுகள்
எதிரொலித்து கல்வீசி
உண்டாக்கும் வட்ட வட்ட
சலனங்களில் தொலைந்து கொண்டே
தேடிக்கொண்டிருக்கிறேன்
வாழ்தலையும் தொலைதலையும்
ஒரு சேர திறக்கும் சாவிதனை ...
இப்போதைக்கு
பட்டாம்பூச்சியின்
சிறகுடைக்க
நீயற்று நனையும்
மழைத்துளியே
போதுமானதாயிருக்கிறது ...

உன் கவண் வில்லில்
பொருந்திய சொற்களை
பத்திரப்படுத்து
பிறிதொரு கார்காலமற்ற
கடின பொழுதுகளுக்காய்... !!!

கவண் பொருந்திய சொற்களை ...

இப்போதைக்கு
பட்டாம்பூச்சியின்
சிறகுடைக்க
நீயற்று நனையும்
மழைத்துளியே
போதுமானதாயிருக்கிறது ...

உன் கவண் வில்லில்
பொருந்திய சொற்களை
பத்திரப்படுத்து
பிறிதொரு கார்காலமற்ற
கடின பொழுதுகளுக்காய்... !!!

ப்ரியங்கள் குழைத்தோடும் ...

ப்ரியங்கள் குழைத்தோடும்
நதியில் மிகக் கவனமாய்
கால் நனைக்காது
தடங்களை விட்டுச் செல்கிறாய் ...

தடுமாறி நின்றவனும்
உணர்ந்திருக்கக் கூடும்
புரிதலுக்குப் பின்னான
பிரிவின் வலியை ...!!!

மறுத்துக்கொண்டே சரி என்கிறேன் ...

அலையின் ஓய்வற்ற
இரைச்சலின் மேல்
வெறுமை கொண்டலையும்
ஓர் வண்ணத்துப்பூச்சியாகவே அலைந்து கொண்டிருக்கிறேன்...

கொட்டும் பெருமழையாய் வீழ்பவனை கைகளில் ஏந்திக்கொள்ளும் பிரயத்தனங்களில் கண்களில் பொருத்திய கண்மை கரைப்பதே இலட்சியம் உனக்கு...

கதகதப்பிற்காய் ஏங்கும் பூனைக்குட்டியை ஒத்தவளாய்
உன் கைவிரல்களுக்காய் காத்துக்கொண்டிருக்கிறேன் தேர்ந்தெடுக்கப்பட்ட உனதான
சில வார்த்தைகளோடு ...

நமக்கென பெய்யும் மழையில் நீயின்றி நனைந்தும்
உன் பிடிவாத விலக்கல்களில்
துளி கண்ணீரிட்டு அதில் அழுத்தமாய் தீவிரமாகவே உன்னை எழுதிக் கொள்கிறேன்...

அர்த்தமற்று எழுதியும் பேசியும் திரிந்து கொண்டிருந்தவள்
கனத்த மௌனங்களில் தவிப்புடன் சில சொற்களை பத்திரப்படுத்த கற்றுக்கொண்டது எப்போது...

உடையக்கூடாதென்ற கவனங்களில் உடைத்தும் விடுகிறாய்
அதீத ஸ்நேகத்தில் அதீத வெறுமையிலும் ஊசலாடிக்கொண்டே மறுத்துக்கொண்டே சரி என்கிறேன்...