Tuesday 19 May 2015

விலகாமல் நீ

கிளைகளை உலுக்கி
ஓய்ந்து போகும்
காற்றாய் நீ....

விலகிப்
போவதில்லை...
அடங்கித்தான்
போகிறாய்...!!!

எதிர்கொண்டே
காத்திருப்பேன்
எக்கணமும்
உதிர்ந்து போய்விட ...!!!

Monday 11 May 2015

மிரண்ட விழிகளுடன்
தயங்கி நுழையும்
ஓர் பூனை போலவே
உன் கோட்டைக்குள்
பிரவேசிக்கிறேன் நான்......

நுழைந்த மறுநொடியில்
கபளீகரம் செய்யும்
அரக்கனாய் மாறி
உன் உரையாடல்களில்
விழுங்க விழைகிறாய் நீ .....

உன் நட்பை விரும்புகிறேன்
என்றுரைக்கும் கணத்தில்
சரியத் துவங்குகிறது
உன்னை மறைந்திருந்த
மாயக்கோட்டைகள்.....

Friday 8 May 2015

பரிசுத் திட்டங்கள் ....

துவங்கி விட்டது பரிசுத்திட்டங்களைப் போன்ற வசீகரமான அறிவிப்புகள் . சுயம் அற்றுப் போய் வரிமாறாமல் எழுதக் கற்றுக்கொண்டவர்கள் , இன்று பள்ளிக்குத் தேடித்தந்த பெருமைகளால் அடுத்துத்து வளமான கல்விக்குத் தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த வருட பத்தாம் வகுப்பில் 490 எடுப்பவர்களுக்கு கல்விக் கட்டணமும் விடுதிக் கட்டணமும் முற்றிலும் இலவசம். மற்றவர்க்கு விடுதிக் கட்டணத்துடன் சேர்த்து 180000 மட்டுமே வருடம் ஒன்றுக்கு.

விடுதியில் சேர்க்கும் பட்சத்தில் காலநேரம் இல்லாமல் படிக்கச்சொல்லி இம்சித்தல், மதிப்பெண் விளைவிக்கும் இயந்திரங்களாய் மாற்றல், குழந்தைகளின் இயல்பான மனநிலை மாற்றியமைத்தல் போன்ற சிறப்பு சலுகைகள் உண்டு. சலுகைகளை பெற விரும்பாத பெற்றோர்களின் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக காரணம் சொல்லி வெளியேற்றப்படுவர்.

இதையெல்லாம் தாண்டி பகீரதப் பிரயத்தனம் செய்து 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் பதினேழு வயதிலேயே நாற்பது அல்லது ஐம்பது இலட்சம் பணத்தை பெற்றோருக்கு மிச்சப்படுத்தித் தரலாம் என்பது கூடுதல் சலுகையாம் .

இதற்கு ஆரம்பகட்டமாய் படிக்கும் மாணவர்களிடம் இருந்து சராசரி கற்றல் திறன் கொண்ட மாணவர்கள் துண்டிக்கப்படுவர். அடித்தட்டு மாணவர்களுடன் பழக வாய்ப்பற்றுப் போன அவர்கள் நாளை மருத்துவர்களாகவும் , பொறியாளர்களாகவும் மாற்றப்பட்டு நாட்டின் தூண்களாக, சமூக அக்கறை கொண்டவர்களாக மாறுவர்.

இதையெல்லாம் சரியாக புரிந்துகொண்ட பெற்றோரின் வாகனங்கள் நாளை முதல் பள்ளியை நோக்கி படையெடுக்கப் போகிறது. இரண்டாண்டுகள் பணம் செலுத்தி டியூசன் சென்டர்களாய் மாறிப் போன வகுப்பறைகளில் அடமானப் பொருளாய் தங்கள் பிள்ளைகளை மாற்றப் போகின்றனர்.

வாழ்த்துவோம் நாமும் .....

Wednesday 6 May 2015

நீ நான் மழை

குடை வாய்க்கப்பெறாத ஓர் மழைநாளில்தான் நிகழ்ந்தது நம் முதல் சந்திப்பு. என்மீது உன் பார்வை பட்டுத்தெறிக்கிறது உதிர்ந்து தெறிக்கும் மழைத்துளிகளுக்கு இடையில். என்னை நனைத்து வழியும் துளிகளுக்கிடையில் தயக்கத்தில் உன்னை நிமிர்ந்து பார்க்கையில் கடையோடும் புன்னகையோடு ஒதுங்கி வழிவிடுகிறாய்.

தயக்கத்துடன் உன் வீட்டினுள் நுழைகையில் ஈரத்தில் உண்டான பாதச்சுவடு பற்றி பின் வருகிறாய். அனிச்சையாய் நீட்டும் பூத்துவாலை பற்றி ஒத்தி எடுக்கையில் கணம் தாளாமல் அதனுடன் சேர்ந்தே நழுவுகிறது நிகழ்காலமும்.

"காபி போடும்மா குளிருது "  என்றவாறே எனக்கு பிடித்த "காதல் ஓவியத்தை" கசிய விடுகிறாய். "இந்த மழை விடாது போல" என்று உன் அம்மா  உரைக்கையில் எந்த சொற்களையும் தேடி அலைய அவசியமின்றி என்மீது பார்வையை மட்டும் திருப்பி உயிரின் ஆழத்தை உற்று நோக்குகிறாய்.

வெளிவரா வார்த்தைகள் தொண்டைக்குழியில் ஊசலாட மழையை கண்களால் விழுங்கத்துவங்குகிறேன். மழை வாசல் தாண்டி என்னுள் இறங்கத்துவங்குகையில் வானவில்லாய் மனது வளைந்து உன்னைத் தொடுகிறது.

பருகி முடித்த தேநீர் கோப்பையினை விரல் தீண்டி வாங்குகையில் ஈரம் தோய்ந்த உடலெங்கும் வேகமாய் பரவுகிறது அதிர்வலைகள் . உலர்ந்து போன இதழ் பிரித்து கிளம்புகிறேன் என கிசுகிசுப்பாய் சொல்லிவிட்டு நகர்கிறேன் .

ஒவ்வொரு துளிகளையும் மறுக்காமல் ஏந்திக்கொள்ளும் நிலம் போலவே என்னை இன்றும் ஏந்திக்கொள்கிறாய். ஒவ்வொரு நாளும் புதுமுகம் காட்டும் மழையாய் நானும் , சலிக்காமல் ஏற்றுக்கொள்ளும் நெகிழ்நிலமாய் நீயும் என  இன்றும் நீ , நான் , மழை, ஒரு தேநீர் கோப்பை தேநீர் என சலியாமல் தொடர்கிறது வாழ்வு .