Wednesday 1 April 2015

தேன்மொழி

நேற்று மாலை அலுவலகம் முடிந்து அத்தியாவசியமான சில பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள் நுழைந்து, மாமாவின் இரத்தக்கொதிப்பு தாறுமாறாக எகிறும் அளவிற்கு கொஞ்சமாக சில பொருட்களை நிறைத்திருந்த வேளையில், யாரோ என்னையே பார்ப்பது போல் தோன்ற திரும்பி பார்த்தேன் .

        ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்த தேன்மொழி நின்றிருந்தாள்.ஆனந்த விகடனை புத்தகப்பையில் கொண்டுவந்து எனக்கு அறிமுகம் செய்தவள்.எப்பொழுதும் நேர்த்தியாய் வைத்த பூ வாடாமல் பள்ளிக்கு வந்து செல்வாள்.

       கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய் என கண்களில் ப்ரியம் வழியபேசிக்கொண்டோம்.அலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு அவசரகதியில் விடை பெற்றோம்.

      நேரில் பார்த்தால் கூட பழைய அன்புடன் பேசிக்கொள்ள இயலாமல் சிறு புன்னகையுடன் கடந்து செல்லவும் , உயர்த்தப் படாமலேயே அசைக்கும் கை அசைவிலும் வாழ பழகிக்கொண்டோம்.

      இளம்பிராயத்தில் தூய்மையாய் சிரித்த சிரிப்புகளும், சொற்களின் அழகு கூடிய பேச்சுகளும் என மனம் பின்னோக்கி பயணிப்பதை தவிர்க்க முடிவதில்லை.இரவு முழுக்க ஆழ்தூக்கத்தை நிறைத்திருந்தாள் என் தோழி.

    உயர்த்திக்கொண்ட பொருளாதார வாழ்வின் உயரங்களுக்கு மத்தியில்,    சிறுபிராயங்களுக்கு அழைத்துச் செல்லும் இது போன்ற நிகழ்வுகள் மண்ணின் வாசம் நுகரச் செய்தல் போன்றது. உறுதியாகத் தெரிகிறது,  இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த நினைவில்  சுழலப் போவது......

1 comment:

  1. இனிய சந்திப்பு... இனிமை மேலும் தொடரட்டும்...

    ReplyDelete