Sunday, 11 October 2015

சிறகுகளை நம்பி ...

காலை குளிருக்கு பயந்து வீட்டின் வாசல் திறக்காமல் வேலைகள் அனைத்தும் முடிந்தது.இனி சற்று நடப்பதா இல்லை இன்னும் சிறிது வெளிச்சம் வரும்வரை முகநூலுக்கு போகலாமா என்ற யோசனையில் அலைபேசியை கையில் எடுத்து அமர்கிறேன்.

        ஜன்னல் கம்பில் வந்து அமரும் சிட்டுக்குருவி கவனம் ஈர்க்கிறது .அதனிடம் ஏன் குளிர், மழை பற்றிய முணுமுணுப்பு இல்லை என யோசிக்கிறேன்.

         பறவைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதன் பறத்தல் மட்டும் இல்லை போலும் .அதன் இடைவிடாத பயணம், தடை தாண்டிப் போகும் அதன் முயற்சி , இயல்பு மாறாத அதன் களிப்பு யாவும்தான்!

   பறவை கிளைகளை
     நம்பி அமர்வதில்லை....
   தன் சிறகுகளை நம்பி .....

குடை பிடித்தாலும் பாதம் தொடும் ...

மழை
வானத்தின்
கொடைதான்......

ஒரு போதும்
மறுக்க இயலாது
மழையை .....

குடை பிடித்தாலும்
பாதம் தொடும் !.....

சொற்கள்...

மனிதர்களின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள். அது தானியத்தை போன்றது.விளைநிலத்தில் விதைக்கப்படும்போது வளர்ந்து செழிப்பதோடு விதையாகவும் மாறுகிறது .விதையாக்குவதும் வீணாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது ...

கவிதைக்காரா ...

இவ்வளவு குழப்பம் ஏன்
கவிதைக்காரா ?.....

எனக்கென தினம் எழுதும்
கவிதைகளை விடவா
எனக்கோர் பெயர் சூட்டுவதில்
சிரமம் உனக்கு?....

ரயில் பயணங்களில் ...

ரயில் நிலையத்தின் வாசல்
கனவின் நுழைவாயிலாகவே
தெரிந்தது எனக்கு....

அது என்னை எங்கேனும்
அழைத்து செல்கிறதா
இல்லை திரும்பவும்
அழைத்து வருகிறதா ...

ரயில் நகரும் போது
மனமும் சேர்ந்தே நழுவிச்செல்கிறது...

ரயிலும் வசீகரமாகவே
தொடர்கிறது தன்
பயணங்களை.....

Friday, 9 October 2015

என் மீதான நேசத்தின் ...

என் மீதான
உன் நேசத்தின்
கேள்விகள்
உன்னிடத்திலும் ......

அதற்கான பதில்கள் என்னிடத்திலும்
பத்திரமாய்
இருக்கட்டுமே!.....

உன்னிடம் பேசப்போவதில்லை.

உன்னிடம்
    பேசப்போவதில்லை.....

என்பதில் இருந்தே.
    துவங்குகிறது
         நம் உரையாடல்கள்....