Monday 1 June 2015

மரணம் மிக சுலபம்

ஒரு மனிதனின் பெரும் நம்பிக்கைகளும் கனவுகளும் கலந்து உருவான வாழ்க்கை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சிலரது அலட்சியத்தாலும் அவசரத்தாலும் வாகன விபத்தாக மாறி அவனை அழித்துவிட்டிருக்கிறது. வாகன விபத்துகள் குறித்த அச்சம் மேலோங்கி நிற்க காரணம் என்ன?

    எதிர்பாராமல் நிகழ்ந்தது சாலை விபத்துக்களா இல்லை சாலை பலிகளா? செத்துக்கிடப்பவன் எத்தனை கனவுகளுடன் சென்றிருப்பான்? எவ்வளவு நம்பிக்கையுடன் வாழ்வை இறுகப் பற்றியிருப்பான்? எதற்காக இவன் உயிரிழந்திருக்க வேண்டும்? இவன் உயிர் நீங்கி தேவையற்ற பொருளாய் இங்கு கிடக்க வேண்டிய காரணம் என்ன?

எதற்கு அம்மா அழுகிறாள் என அவளைத் தேற்றும் மூத்தவளையும் , ஏதும் அறியாமல் கம்பியில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் இளையவளையும் கண்டு, மீதமிருக்கும் வாழ்வின்மீது பெரும்பயம் கொண்டவளாய் விடிய விடிய ஓயாமல் அரற்றிக் கொண்டிருக்கிறாள் ஜீவனற்ற விழிகளோடு.

எந்த கேள்விகளுமற்று நழுவிச் செல்லும் கணங்களுக்கு இடை இடையே எழும் ஒப்பாரிச்சத்தங்களும் , விபத்து குறித்த படங்கள் அலைபேசியில் பரிமாறப்படுதலும், பேசிப்பேசி மாய்ந்து போகும் உறவுகளுக்கு இடையிலும் நகர்கின்றன நிமிடங்கள் .

இரண்டாம் முறையாய் பிணவறை வாசலில் உறவுகளால் மஞ்சள் அப்பி பூச்சூடி திலகமிடப்பட்டு அலங்கரிக்கையில் அவளும் உயிரற்றவளாகவே அமர்ந்திருக்கிறாள் . உள்ளிருந்து உடல் பிளக்கும் சப்தம் வெளிக்கசிகையில் அனைத்து முகங்களிலும் துயர் கசிகிறது .

நிற்கும் வாகனங்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட அதில் ஒன்றினை பாய்ந்து வாங்கி அதிலிருக்கும் அவன் படத்தை வெறிக்கிறாள் அவள். அப்பாவ என்கிட்ட குடு நான் பத்திரமா வச்சுக்கறேன் என்றவாறே எட்டாய் மடித்து சட்டைப்பையில் சொருகிக்கொள்கிறாள் மகள்.

இனி அவர்கள் எதிர் கொள்ளும் கஷ்டத்தை விடவும் அதை மூடி மறைக்க அவர்கள் படப்போகும் பெருந்துயரமும் , அவமதிப்பும், வலிகளும், பற்றின்மையும் அவன் இறப்பை விட வலி மிகுந்ததாய் இருக்கக்கூடும் . வாழ்வின் மீதான பற்றுதல்களை இந்த சாலை விபத்து ஓர் நிமிடத்தில் அபத்தமான ஒன்றாக மாற்றிவிட்டிருக்கிறது. மரணம் மிக சுலபம் போல .

எல்லாம் முடிந்து வெளிவந்து புகைகூண்டில் இருந்து வெளியேறும் கரும்புகை காண்கையில் உயிரும் இவ்வாறே எந்த சப்தமும் சலனமும் இன்றி வெளியேறி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஒலிபெருக்கியில் கசிகிறது" பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்துத் துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் எங்கே?

3 comments:

  1. உண்மை .நான் அனுபவிப்பவள்.என் சோகத்தையே அப்படியே சொல்லியிருக்கிறீர்கள் .
    kaர்த்திக் அம்மா
    கார்த்திக் அம்மா

    ReplyDelete
  2. மரணம் என்பதும் ஒரு வரம்...

    ஆனால் இது___

    ReplyDelete
  3. சொல்லிச் சென்றவிதம்
    மனம் கீறிப் போனது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete