Friday 8 May 2015

பரிசுத் திட்டங்கள் ....

துவங்கி விட்டது பரிசுத்திட்டங்களைப் போன்ற வசீகரமான அறிவிப்புகள் . சுயம் அற்றுப் போய் வரிமாறாமல் எழுதக் கற்றுக்கொண்டவர்கள் , இன்று பள்ளிக்குத் தேடித்தந்த பெருமைகளால் அடுத்துத்து வளமான கல்விக்குத் தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த வருட பத்தாம் வகுப்பில் 490 எடுப்பவர்களுக்கு கல்விக் கட்டணமும் விடுதிக் கட்டணமும் முற்றிலும் இலவசம். மற்றவர்க்கு விடுதிக் கட்டணத்துடன் சேர்த்து 180000 மட்டுமே வருடம் ஒன்றுக்கு.

விடுதியில் சேர்க்கும் பட்சத்தில் காலநேரம் இல்லாமல் படிக்கச்சொல்லி இம்சித்தல், மதிப்பெண் விளைவிக்கும் இயந்திரங்களாய் மாற்றல், குழந்தைகளின் இயல்பான மனநிலை மாற்றியமைத்தல் போன்ற சிறப்பு சலுகைகள் உண்டு. சலுகைகளை பெற விரும்பாத பெற்றோர்களின் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக காரணம் சொல்லி வெளியேற்றப்படுவர்.

இதையெல்லாம் தாண்டி பகீரதப் பிரயத்தனம் செய்து 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் பதினேழு வயதிலேயே நாற்பது அல்லது ஐம்பது இலட்சம் பணத்தை பெற்றோருக்கு மிச்சப்படுத்தித் தரலாம் என்பது கூடுதல் சலுகையாம் .

இதற்கு ஆரம்பகட்டமாய் படிக்கும் மாணவர்களிடம் இருந்து சராசரி கற்றல் திறன் கொண்ட மாணவர்கள் துண்டிக்கப்படுவர். அடித்தட்டு மாணவர்களுடன் பழக வாய்ப்பற்றுப் போன அவர்கள் நாளை மருத்துவர்களாகவும் , பொறியாளர்களாகவும் மாற்றப்பட்டு நாட்டின் தூண்களாக, சமூக அக்கறை கொண்டவர்களாக மாறுவர்.

இதையெல்லாம் சரியாக புரிந்துகொண்ட பெற்றோரின் வாகனங்கள் நாளை முதல் பள்ளியை நோக்கி படையெடுக்கப் போகிறது. இரண்டாண்டுகள் பணம் செலுத்தி டியூசன் சென்டர்களாய் மாறிப் போன வகுப்பறைகளில் அடமானப் பொருளாய் தங்கள் பிள்ளைகளை மாற்றப் போகின்றனர்.

வாழ்த்துவோம் நாமும் .....

1 comment: