Saturday 18 April 2015

ஓர் வெயில் நாளில்......

இன்றைய வெயில் நாளில் காலை முதலே அவசரகதியில் கிளம்பி அலுவலகம் புகுந்து வேலைகளில் கவனம் கொண்டு மூழ்கியிருக்கையில் கவனம் பிறழ்கிறது ஓர் நிகழ்வில்.

மரங்களற்று போன பிரதான சாலையில் இருந்து விலகி மரங்களடர்ந்த எங்கள் வளாகத்திற்குள் அமைந்த மரத்தடியில் தஞ்சம் புகுந்திருந்தனர் துப்புறவு மற்றும் சாக்கடை தொழிலாளர் என அறுவர் .

என் ஜன்னலோரத்தில் அந்த மரம் அமையப்பெற்றதால் சிறிது கவனத்தை அவர்கள்மேல் கொண்டே வேலை செய்கிறேன்.

சற்று நேரத்தில் ஏழாமவன் கையில் சில உணவு பொட்டலங்களுடன் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.வட்டமிட்டு அமர்ந்து அவர்கள் சாப்பிட துவங்கியதும் கேலியும் கிண்டலுமாக உள் இறங்குகிறது உணவு.

அதில் ஒருவன் "கருப்பங்கடைல வாங்கலியா...உவ்வே இது நல்லால்ல" என பழிப்பு காண்பிக்கிறான். சிறிது சிறிதாக வேலை மறந்து அவர்களை வேடிக்கை பார்ப்பதில் லயிக்கிறது மனது.

இரண்டு பீடிகள் பற்ற வைக்கப்பட்டு எழுவர் கைகளிலும் மாறி மாறி வலம் வருகிறது.நாகரிகம் என கருதி பேச்சும் சிரிப்பும் அளவெடுக்கப்படும் இன்றைய சூழலில்,  அவர்களின் வெள்ளந்தி சிரிப்பும் , கேலியும் கிண்டலும் மனதினில் ஏக்கத்தை விதைக்கும் வேளையில் .....

நான் பார்ப்பதை கவனித்த ஓருவன்" அவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும் போலடா , கிளம்பலாம்" என்றதும் அனைவரும் திரும்பி என்னை பார்க்கின்றனர்.

வேண்டாம் என கூவும் மனதினை கட்டுப்படுத்திக் கொண்டு ஏதுமறியாதவள் போல கணினியை உற்று நோக்குகையில் மீண்டும் எங்கிருந்து துவங்குவது பணியை என குழம்புகிறது மனது.

1 comment:

  1. அடடா...! இன்னும் கொஞ்ச நேரம் ரசிக்க முடியவில்லையே...

    ReplyDelete